புனர்வாழ்வு

NEWS Rehablitation

Friday, July 02, 2004

முள்ளி பொதுமயானத்தை புனரமைக்கக் கோரிக்கை

வரணி வடக்கில் அமைந்துள்ள முள்ளி பொதுமயானத்தைப் பொதுமக்கள் பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று கூறப்படுகின்றது. தென்மராட்சியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின்போது பொதுமக்கள் இடம்பெயர்ந்த காலகட்டத்தில் இப்பிரதேசத்தில் நிலைகொண்ட இராணுவத்தினர் இம்மயானப் பகுதியைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக் களமாகப் பயன்படுத்தினர். அந்தவேளையில் இந்த மயானத்தைச் சுற்றிப் பாரியதும் உயர்ந்ததுமான மண் அரணை அமைத்துப் பாதுகாப்புப் பிரதேசமாக அவர்கள் ஆக்கினர்.

இந்த மயானம் பருத்தித்துறை - கொடிகாமம் பிரதான வீதியின் ஓரமாக அமைந்திருந்ததால் சுடுகலன் பயிற்சிகளின்போது அப்பாதை ஊடான பொதுப்போக்குவரத்து இடைநிறுத்தப்படுவது வழக்கமாகும்.

பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டபோது மயானக்கிரியை மண்டபம் அரணுக்குள் இருந்து. தற்போது வெளிப்பகுதியில் உள்ளதாக அமைந்தது. இங்கிருந்து இராணுவம் விலகிய காலம் முதல் இந்த மயானம் பயன்படுத்தப்படாமல் சுற்றவுள்ள அரண்களும் பாரிய பற்றைகள் வளர்ந்து காட்டுப் பிரதேசமாக மாறியுள்ளது.

இதனால், தற்சமயம் தகனக்கிரியைகள் மயானத்தின் மேற்கேயுள்ள தனியாரின் தோட்டக்காணி ஒன்றிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. எனவே, மேற்படி இந்த மயானத்தைப் புனரமைத்துச் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று - இப்பகுதிப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.