புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, February 14, 2004

அவசரமாக அறிவிக்கப்பட்ட தேர்தல், இடம்பெயர்ந்து வாழும் அகதிகள் வாழ்வில் மீண்டும் சங்கடங்களை உருவாக்கவுள்ளது - யு.என்.எச்.சி.ஆர்.

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்தும், மீண்டும் நாடுதிரும்பி தற்காலிகமாகவும் வாழும் 380 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் அகதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு மிகவும் அச்சத்தையம் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் ஜெனீவாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியும் எக்ஸ்கொம் அமைப்பின் அதிகாரியுமான ஜீன்-மார்க் போல்காரிஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இடம்பெயர்ந்து தற்காலிகமாக வாழும் அகதிகளைப் படிப்படியாக மீளக்குடியேற்றும் நடவடிக்கைகளை யு.என்.எச்.சி.ஆர். துரிதமாகவும் திட்டமிட்ட வகையிலும் மேற்கொண்டு வரும் நிலையில், திடீரென அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தல், மிகுந்த சிரமங்களை உண்டுபண்ணியுள்ளதுடன், இத்தகைய மனிதநேயப் பணிகளுக்கு முழுமையான தடையாகவும் அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தினங்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, புத்தளம் போன்ற இன்னும் பல பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டு விரிவான ஆய்வுகளை நடாத்திய ஜீன்-மார்க், விடுதலைப் புலிகள் சமாதானத் தீர்வில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருப்பதையும், அதற்காக முழுமையான ஒத்துழைப்புத்தர ஆர்வமாயிருப்பதையும் தான் அவதானித்ததாகவும், இடம்பெயர்ந்த அகதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதைத் தான் ஆழ்ந்த கவலையுடன் கவனித்ததாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காவலூர் கவிதன் - ஈழம்
13.2.2004