புனர்வாழ்வு

NEWS Rehablitation

Friday, September 12, 2003

மட்டக்களப்பு கல்லடியில் கிராமிய தகவல் தொழில்நுட்ப நிலையம் திறந்து வைப்பு
கொழும்பிலிருந்து ஜெயா - வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2003, 4:57 ஈழம்

தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு (TITA) தனது கிராமிய தகவல் தொழில்நுட்ப நிலையச் செயற்றிட்டத்தின் கீழ் அதன் 9 ஆவது கிராமிய தகவல் தொழில்நுட்ப நிலையத்தை நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்லடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மூன்று நவீன கணினிகளைக் கொண்டதாக அமையவுள்ள இந்நிலையத்தினை ஆரம்பிப்பதற்கான நிதி உதவியை, கடந்த மாதம், அமெரிக்காவில் இயங்கும் VISIONS அமைப்பின் பணிப்பாளர் மீரா பத்மராஜா அவர்கள் VISIONS சார்பாக TITA அமைப்பிற்கு வழங்கியிருந்தார். இந்நிதி அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான தமிழ் இளைஞர் எனும் அமைப்பினால் சேகரிக்கப்பட்டு, VISIONS அமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ளது.

வசதி குறைந்த மாணவர்கள், இளைஞர், யுவதிகளுக்கு மிகக் குறைந்த அடையாளக் கட்டணத்தில், தகவல் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு TITA இந்த கிராமிய தகவல் தொழில்நுட்பச் செயற்றிட்டத்தை கடந்த நவம்பர் மாதம் ஆரம்பித்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 8 கிராமிய தகவல் தொழில்நுட்ப நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் இரு நிலையங்களை யாழ்ப்பாணத்திலும் ஹட்டனிலும் திறந்து வைப்பதற்கான ஆரம்ப ஏற்பாடுகளை TITA பூர்த்தி செய்துள்ளது.

கல்லடி கிராமிய தகவல் தொழில்நுட்ப நிலையம், கல்லடியில் பிரதான வீதியில், சிறீ இராமகிருஷ்ண மிஷனிற்கு அண்மையாகத் திறக்கப்பட்டுள்ள இந்நிலையம் கல்லடியைச் சூழவுள்ள நாவற்குடா, மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி, ஆரையம்பதி போன்ற கிராமங்களைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர், இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் பற்றிய ஆரம்பக் கல்வியையும் கணினிப் பயிற்சியையும் வழங்குவதில் பெரும் பங்காற்றும் என தாம் நம்புவதாக TITA இது தொடர்பாக விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தினூடாக ஆசிரியர், அரச உத்தியோகத்தர்களுக்கும் கணினிப் பயிற்சியை வழங்க தாம் உத்தேசித்துள்ளதாகவும் எதிர் காலத்தில் சாதாரண சமூகச் செயற்பாடுகள் அனைத்திலும் மிக அதிகளவில் தேவைப்படப்போகின்ற அடிப்படை தகவல் தொழில்நுட்ப ஆற்றலை எமது சமூகத்தின் இளஞ் சந்ததி பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இவ்வாறான நிலையங்கள் மேலும் திறந்து வைக்கப்படுவதற்கு, நலன்விரும்பிகள் முன்வரவேண்டும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்.கொம்