புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, February 15, 2004

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிர தேசங்களில் சமாதானத்துக்கும் அபிவிருத்திக்குமான தேவைகள் பற்றி ஆராய்வு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிர தேசங்களில் சமாதானத்துக்கும் அபிவிருத்திக்குமான தேவைகள் பற்றிக் கொழும்பு மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம் யாழ். குடாநாட்டில் ஆராய்ந்து வருகிறது. நேற்றுமுன்தினம் குடாநாட்டிற்கு வருகைதந்த கொழும்பு மனித நேய அமைப்புக்களின் ஒன்றியத்தின் திட்ட மானிய நிர்வாகி முரளிதரன் வாசு தேவன், அந்த அமைப்பின் சமாதான அபிவிருத்திக்கான ஆலோசகர் கலாநிதி அனிதா நேசையா ஆகியோர் இந்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் அதன் பிரதிநிதிகளை அவர்கள் சந்தித்துப் பேசினர். சமாதானச் சூழலின் பின்னர் குடாநாட்டில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், யுத்த சூழ்நிலையால் குடும்பத் தலைவர்களை இழந்த பெண்களுக்கான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், சிறுவர் மற்றும் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மிதிவெடியால் அங்கவீனர் ஆக்கப்பட்டவர்களுக்குப் புனர்வாழ்வு அளித்தல், யாழ். குடாநாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பன தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.

தமிழர் புனர்வாழ்வுக்கழக யாழ். மாவட்ட இணைப்பாளர் சு.ஜெயராசா தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மனித முன்னேற்ற நடுநிலைய (கியூடெக்) இயக்குநர் வண.பிதா சி.ஜி.ஜெயக்குமார், ஊற்று நிறுவனப் பணிப்பாளர் பி.விக்னேஸ்வரன், இணைய நிர்வாக அலுவலர் எஸ்.சோதிநாதன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகளையும் சந்தித்து மனித உரிமைகள் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிக் குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். யாழ். செயலகத்தில் மேலதிக அரச அதிபர் திருமதி பத்தினியம்மா திலகநாயகம் போலையும் சந்தித்துப் புனர்வாழ்வுத் திட்டம் பற்றிக் கலந்துரையாடினர்.

ஆதாரம் - உதயன்.