புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, May 13, 2004

சிறுவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அமைப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்வதில்லை: வவுனியா மாவட்ட கொள்கை முன்னெடுப்பு பொறுப்பாளர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணையும் சிறுவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று அமைப்புக்கள் தெரிவிக்கின்றனரே தவிர விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்கிறார்களா என்பது கேள்விக்குறியான விடயமாக இருப்பதாக வவுனியா மாவட்ட கொள்கை முன்னெடுப்புப் பிரிவு பொறுப்பாளர் சிறீநாத் தெரிவித்தார்.

இயக்கத்தில் இணைய வந்த சிறுவன் ஒருவரை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு யுனிசெப் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்த பின்னர் இதனை தெரிவித்தார். இயக்கத்தில் இணையும் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று அண்மை நாட்களாக தமக்கு 18 பேர் தொடர்பான முறைப்பாடுகள் வவுனியாவில் கிடைத்து இருப்பதாகவும், அவர்களும் வயதில் குறைந்தவர்களாக இருந்தால் அவர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் 1500 பேர் வரையிலானோர் சம்பந்தமாக தமது அமைப்பிடம் முறைப்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பணிப்பிற்கிணங்க நாளுக்கு நாள் போராட்டத்தில் இணைய வரும் சிறுவர்களை விடுதலை செய்து வருகின்றாம்.

சிறுவர்கள் தமது கஷ்டத்தின் நிமிர்த்தமே இயக்கத்தில் இணைந்து நன்றாக வாழலாம் என்று கருதி வருகின்றனர். நாங்கள் இயக்கத்தில் இணைத்து வருகிற சிறுவர்களை தொடர்ச்சியாக விடுதலை செய்து வருகின்றோம்.

விடுதலை செய்யப்படும் சிறுவர்களை பராமரித்து அவர்களின் கல்வி நிலை வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் வேறு வழியில் செல்லாமல் தடுக்க முடியுமென்று சிறீநாத் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட வேப்பங்குளம் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் கிளை செயலகத்தில் இந்த நிகழ்வு நேற்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.

வவுனியாவிலிருந்து மகாமுனி
13.5.2004

0 Comments:

Post a Comment

<< Home