புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, August 07, 2003

விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க இடைத்தங்கல் முகாம்கள்
(இலங்கை நிருபர் ஏகலைவன் - வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2003, 7:25 ஈழம்)

விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு இடைத்தங்கல் முகாம்களில் புனர்வாழ்வளித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் திட்டம் உட்பட பத்துத் திட்டங்கள் வடக்கு கிழக்கில் அமுல்படுத்தப்படவுள்ளதென யுனிசெப் கூறுகின்றது.

இந்தத் திட்டம் வெற்றி பெறுவதற்கு விடுதலைப் புலிகள் சிறுவர்களை தமது இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என உறுதியளிக்க வேண்டும் என்றும் யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி டெற் சைபான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் யுனிசெப் உதவியுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் நிர்மானிக்கப்படவுள்ள இடைத்தங்கல் முகாமிற்கான அடிக்கல்லை நேற்று நாட்டி வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஏற்கனவே கிளிநொச்சி, திருகோணமலை மாவட்டங்களில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் யுனிசெப்பின் இலங்கைப் பிரதிநிதி கூறினார்.

இதேவேளை, தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை புலிகள் அமைப்பின் கீழ் இயங்கும் நிறுவனமாக சிலர் கருதுகின்ற போதிலும் அதில் எதுவித உண்மையும் இல்லை என அந்த கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், தமது கழகம் மேற்கொண்டு வரும் சிறுவர் திட்டங்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பூரண ஒத்துழைப்பை வழங்கிவருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட புலிகளின் சிறப்புத் தளபதி ரமேஷ் கருத்து தெரிவிக்கையில் சிறுவர்களுக்கு, உதவும் முகமாக யுனிசெப் மேற்கொண்டுவரும் இத்தகைய திட்டங்களுக்கு விடுதலைப் புலிகள் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக சுட்டிக்காட்டினார்.

நன்றி - புதினம்.கொம்

0 Comments:

Post a Comment

<< Home